போபால்:
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, ஒரு பெண் உட்பட 3 இஸ்லாமியர்கள் மீது, பசு குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மத்திய பிரதேசத்தின் சியோனி என்ற பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலின்போது, “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறுமாறும், தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமியர்களை பசு குண்டர்கள் வதைத்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், இஸ்லாமிய ஆண்கள் 2 பேரை மரத்தில் கட்டிவைத்து, பெரிய தடிகளைக் கொண்டு பசு குண்டர்கள் கடுமையாகத் தாக்குகின்றனர். செருப்பாலும் தலையில் அடிக்கின்றனர். அடிக்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமும் போடுகின்றனர். அவர்களுடன் இஸ்லாமிய பெண் ஒருவரும் இருந்த நிலையில், அந்த பெண்ணை அவரது கணவரை வைத்தே தாக்குகின்றனர். அவரும், பசு குண்டர்களின் தாக்குதலுக்குப் பயந்து, வேறு வழியின்றி தனது மனைவியைத் தாக்குகிறார். இந்த காட்சியை அப்பகுதியில் போகிறவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, ஒருவரும் தடுக்கவில்லை.
மே 22 அன்றே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. எனினும், “ஸ்ரீராம்சேனா” அமைப்பில் உறுப்பினராக இருக்கும் சுபம் சிங் என்பவர், தங்களின் தாக்குதல் வீடியோவை மே 23-ஆம் தேதி முகநூலில் பகிர்ந்ததற்கு பின்னரே பசு குண்டர்களின் அராஜகம் தெரியவந்துள்ளது.மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, பசு குண்டர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே கைது செய்யப்பட்டு இருப்பதாக லலித் சாக்கியவார் என்ற உள்ளூர் காவல்துறை அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.தாக்குதல் நடத்திய குண்டர்கள் போபால் பாஜக எம்.பி.யும் சாமியாரிணியுமான பிரக்யா சிங் தாக்கூருடன் எடுத்த புகைப்படமும் தற்போது தற்போது வெளியாகியுள்ளது.